கோலாலம்பூர், ஜூலை.11-
மலேசியாவும் பாகிஸ்தானும் எம்பிசிஇபிஏ எனும் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை இறுதிச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. அத்துடன், பாகிஸ்தானில் இருந்து ஹலால் இறைச்சி ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்தும் இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமட் இஷாக் டாருக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில், வேளாண்மை, குறிப்பாக அரிசி வர்த்தகம் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை ஆராயவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மலேசியா-பாகிஸ்தான் வர்த்தக மதிப்பு 25 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து 1.76 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள நிலையில், விரைவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷாரிஃப்பின் மலேசிய வருகையின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








