அடுத்தவரின் மனைவியான திருமணமான பெண்ணை வசீகரித்து கொண்ட குற்றத்திற்காக ஆடவர் ஒருவரை தண்டிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சட்ட விதி, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியது.
தனது மனைவியை ஓர் ஆடவர் எடுத்துக்கொண்டார் என்று அப்பெண்ணின் கணவர் செய்து கொண்ட போலீஸ் புகார் அடிப்படையில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தம்மை தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டத்தை பயன்படுத்தி, அந்த சட்டத்தின் கீழ் தம்மீது குற்றம் சுமத்தப்பட்டது, அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டரசு நீதிமன்றத்தில் சவால் விடுவதற்கு அனுமதி கேட்டு அந்த ஆடவர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் அரசமைப்பு சட்ட விதியில் எழுந்த சந்தேகம் தொடர்பில் அந்த ஆடவரின் வழக்கு மனு, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தில் நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையில் ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த நபருக்கு எதிராக குற்றவியல் தன்மையில் பிரயோகிக்கப்பட்டுள்ள சட்ட விதியானது, குற்றத்தின் தன்மையை மாற்றிவிடுவதாக உள்ளது என்று தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அந்த ஆடவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக்கெள்ள வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் கிட்சோன் ஃபோங் கேட்டுக்கொண்டார்.








