மலேசியாவில் இளம் வயதினருக்குப் பாலியல் தொடர்பான கல்வி திட்டங்கள் வழங்கப்பட்டாலும் கூட, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட எல்லைகள் குறித்து அவர்களின் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
சக நண்பர்களின் தாக்கம், இணையத்தின் வழியாக கிடைக்கும் உள்ளடக்கம், மற்றும் குடும்பங்களிடையே அவர்களுக்கு உள்ள குறைந்த தொடர்புகள் ஆகியவை ஆபத்தான நடத்தை உருவாக காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளம் வயதினர் சிலர் புறக்கணிப்பு, சுரண்டல் அல்லது ஆதரவின்மை காரணமாக மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலியல் தொடர்பான விவாதங்களைச் சுற்றியுள்ள அவப்பெயர் காரணமாக, இளம் வயதினர் சரியான தகவல் அல்லது உதவியை நாடுவதில் உள்ள தடையையும் நான்சி சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், கடந்த 2019 முதல் 2024 -ஆம் ஆண்டு வரை, 19 வயதிற்குட்பட்ட திருமணமாகாத பெண்களிடையே 21 ஆயிரத்து 114 கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சின் தரவுகளையும் நான்சி மேற்கோள் காட்டியுள்ளார்.
இளையோரிடையே கர்ப்பங்கள் அதிகரித்து வருவது, சமூகம், குடும்ப மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் சவால்களின் பிரதிபலிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








