கோலாலம்பூர், பிப்ரவரி.27-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித் திட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவி சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கியுள்ளனர்.
அந்த முன்னாள் அமைச்சரின் மனைவி தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் பட்சத்தில் நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரும் சதித் திட்ட முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்வ செழிப்பில் கொழிக்கும் அந்தப் பெண்ணும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியுள்ளதாக நம்பப்படும் நிலையில் இந்த சதித் திட்டம் தொடர்பில் அவர், கடந்த ஆண்டு ஜுலை மாதம் இணையம் வாயிலாக ஓன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்த இவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.








