கோலாலம்பூர்,ஜன.11
மலேசியாவில் அந்நிய நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள் , மோசடிக் கும்பலினால் சுரண்டப்பட்டு, வேலையின்றி பரிதவிப்பதாக வெளியான தகவல் குறித்து மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம் ஆதாரத்தை கோரியுள்ளார்.
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடிக் கும்லினால் தருவிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்ட சுமார் 5 லட்சம் பேர் வேலையின்றி பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி வருவதாக இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னணி மலாய் நாளிதழ் வெளியிட்ட பிரத்தியேக செய்தி தொடர்பில் மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம் கருத்துரைத்தார்.
மிகப்பெரிய எண்ணிக்கையிலான அந்நிய நாட்டவர் வேலையின்றி இருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கண்டறிவார்களேயானால் அது குறித்து மனித வள அமைச்சிடம் அதிகாரப்பூர்வமான புகாரை தெரிவிக்குமாறு அமைச்சர் ஆலோசனை கூறினார்.
வங்காளதேசிகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆள்தருவிப்பு நிறுவனங்கள், மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி இந்தியா, வங்காதேசம், நேப்பாள் போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அந்நிய நாட்டவர்கள் தற்போது வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர் என்று அந்த நாளிதழ் அம்பலப்படுத்தியிருந்தது.








