ஆயுதப்படைகளுக்கான இராணுவ உபகரணங்கள் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதை மலேசிய தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நிதி கசிவு அல்லது தவறான பயன்படுத்தலைத் தடுக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
பத்து 3 முகாமில் இன்று நடைபெற்ற ஆயுதப்படைகளுக்கான மடானி பொருளாதாரத் திட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது எந்தத் தடையும் அமலில் இல்லை என்றும், நிதி முறைகேடுகளைத் தடுக்கும் அமைப்புகளை தாங்கள் செயல்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இராணுவத்தின் முக்கியச் செயல்பாடுகளும், அதன் தயார்நிலையும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், கொள்முதல் தடை குறித்துத் தனது அமைச்சு நிதியமைச்சுடன், கலந்தாலோசித்து வருவதாக காலிட் தெரிவித்திருந்தார்.
மேலும், முன்னாள் உயர்மட்ட ஆயுதப்படைத் தலைவர்கள் பலர் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த தடையானது அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.








