தலைநகர் கோலாலம்பூரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பொதுமக்கள் அதிகாலையிலேயே தங்களது பயணத்தைத் தொடங்க ஊக்குவிக்கும் "Bangun KL: Ke Arah Kuala Lumpur Yang Lebih Sejahtera" எனும் புதிய திட்டத்தை கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தொடங்கி வைத்தார்.
தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை சுமார் 1.2 மில்லியன் வாகனங்கள் நகரிற்குள் நுழைவதால் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க, இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காலை 7 மணி முதல் 8 மணி வரை பயணத்தைத் தொடங்குபவர்களை ஊக்குவிக்க ‘ஜஸ் காபி’ நிறுவனத்துடன் அரசாங்கம் கைகோர்த்துள்ளது.
இதன்படி, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள 250 கிளைகளில் அமெரிக்கானோ மற்றும் லேட்டே போன்ற பானங்களை 5 ரிங்கிட் என்ற சலுகை விலையில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் ஏப்ரல் 9 முதல் 2026 இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், இது முற்றிலும் பொதுமக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் 10 விழுக்காடு பயணிகள் முன்னதாகவே நகரிற்குள் நுழைந்தால் கூட போக்குவரத்து நெரிசலில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








