கோலாலம்பூர், மார்ச்.01-
மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம், டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க 2026-ஆம் ஆண்டில் "சமூக நிகழ்ச்சிகள்" போன்ற மக்கள் நெருக்கமான அணுகுமுறைகளைக் கையில் எடுத்துள்ளது. கிராமம், மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகள் மூலம் இணைய மோசடித் தடுப்பு முறைகள், டிஜிட்டல் பாதுகாப்புச் சோதனைகளையும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இணையப் பயன்பாட்டையும் கண்காணிக்க உதவும் 'Parental Control' கருவிகள் குறித்து நேரடிப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இணையப் பாதுகாப்பு என்பது ஒரு தனிமனிதப் பொறுப்பு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த குடும்பம், சமூகம் சார்ந்த கூட்டுப் பொறுப்பாக மாற வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்காகச் சமூக ஊடகப் பிரபலங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், உள்ளூர் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட ஆணையம் திட்டமிட்டுள்ளது.








