கோலா பிலா, பிப்ரவரி.26-
தனது சொந்தத் தாயையே தகரத் திறப்பானால் குத்திக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 55 வயது பெண்ணை, ஜோகூர் பாருவில் உள்ள பெர்மாய் மருத்துவமனைக்கு அனுப்பி மனநலப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோலா பிலா செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கோலா பிலாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட ஃபாரிடா ஏ.ஹாரித் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஹாஸீலியா முஹமட் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண்மணியிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை.
அந்த மாதுவின் மனநல அறிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில், இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.








