புத்ராஜெயா, செப்டம்பர்.08-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மணரம் ஏற்படும் அளவிற்கு வாகனத்தைச் செலுத்தியதற்காக எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லோரி ஓட்டுநரை ஜாமீனில் விடுவிப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தனது தண்டனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கும் லோரி ஓட்டுநரான Y. வெற்றிவேலுவின் மேல்முறையீட்டின் முடிவு தெரியும் வரையில் அவரை ஜாமீனில் விடுவிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ஸைனி மஸ்லான் தெரிவித்தார்.
வெற்றிவேலுவை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதாக டத்தோ முகமட் ஸைனி குறிப்பிட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு 10.20 மணியளவில் பேரா, சுங்கை சிப்புட்டில் ஜாலான் ஈப்போ-கோல கங்சார் சாலையில் மிக ஆபத்தான முறையில் கனரக வாகனத்தைச் செலுத்தி நால்வருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக சுங்கை சிப்புட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2023 ஆண்டு வெற்றிவேலுவிற்கு 5 ஆண்டு சிறையும் 80 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.








