தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் இராமராஜ், இன்று மாலை கோலாலம்பூர் வெஸ்டீன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களுடனான சிறப்புத் தேநீர் உபசரிப்புச் சந்திப்பை நடத்தினார்.
மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் மற்றும் டிஜிட்டல் தளங்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பில், நாட்டின் பல்லின சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
ஊடகங்களை வெறும் செய்தி ஊடகமாக மட்டும் பார்க்காமல், மக்களிடையே நிலவும் புரிதல் இடைவெளிகளைக் குறைத்து, பரஸ்பர மரியாதை மற்றும் 'மலேசியா மடானி' கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வியூக சகாக்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகிறார்கள் என்று துணை அமைச்சர் யுனேஸ்வரன் வெகுவாக போற்றினார்.
தற்போதைய சவாலான தகவல் தொழில்நுட்பக் காலத்தில், துல்லியமான மற்றும் பொறுப்புணர்ச்சி மிக்க செய்திகளை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது என்றும், தேசிய ஒற்றுமைத்துறையின் தூதுவர்களாகச் செயல்படும் ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.














