மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.-இன் புதிய தலைமை ஆணையராக டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் பின் அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்துல் ஹாலிம்-இன் நியமனத்தை மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் அங்கீகரித்துள்ளார்.
இதனையடுத்து, அவரின் பதவிக் காலம் வரும் மே 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நியமனத் தீர்மானத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மாமன்னரிடம் முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்த நியமனமானது, 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் (சட்டம் 694) பிரிவு 5(1)ன் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஷம்சுல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்துல் ஹாலிம்-இன் விரிவான அனுபவம் மற்றும் உயர்ந்த நேர்மையால், நிர்வாக திறன் மேலும் வலுப்பெற்று, மக்களின் நம்பிக்கை அதிகரித்து, நாட்டின் நலனுக்காக ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.








