மலேசியாவில் ‘கார்ப்பரேட் குற்றங்கள்’ எனும் புதிய வகை அச்சுறுத்தல் உருவெடுத்துள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி எச்சரித்துள்ளார்.
இன்று புத்ரஜெயா, SPRM தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சந்திப்பில் பேசிய டான்ஸ்ரீ அசாம் பாக்கி, தற்போதைய குற்றங்கள் சாதாரணமானவை அல்ல என்றும், அவை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னல் மூலம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் அமலாக்கத் துறையிடமிருந்து தப்பிக்கும் வேலைகள் நடைபெறுவதாக அவர் சாடினார்.
அதேவேளை, 'கார்ப்பரேட் மாஃபியா' விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக போலீஸ் துறை விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.










