கோலாலம்பூர், பிப்ரவரி.09-
வரவிருக்கும் சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு, மலேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என 'பிளஸ்' மலேசியா பெர்ஹாட் கணித்துள்ளது.
இது குறித்து பிளஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மூத்த பொது நிர்வாகி முஹமட் யுசோஃப் அப்துல் அஸிஸ் கூறுகையில், பண்டிகைக் காலம் மற்றும் பள்ளி விடுமுறை ஒன்றாக வருவதால், உச்சகட்ட நாட்களில் தினசரி 2.2 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும். இது வழக்கமான 2.1 மில்லியன் வாகனங்களை விட அதிகமாகும் என்றார்.
சீனப் புத்தாண்டு பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வருகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19 அன்று ரமலான் மாதம் தொடங்குகிறது.
விடுமுறை நாட்களை நீட்டிப்பதற்காக மலேசியர்கள் முன்கூட்டியே பயணத்தைத் தொடங்குவார்கள் என்பதால், பிப்ரவரி 12 முதலே போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நெரிசலைச் சமாளிக்க சில வியூகங்களை பிளஸ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிரதான ஓய்வு மற்றும் சேவை மையங்களான R&R – ரில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்க, டோல் சாவடிகளுக்கு அருகில் உள்ள சிறிய ஓய்விடங்கள் மற்றும் இதர வசதிகளைப் பயன்படுத்துமாறு வாகனமோட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.








