பத்து பாஹாட், ஜூலை.03-
சுற்றுலா பேருந்து ஒன்று, இரு லோரிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவம் பின்னிரவு 12.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, 80.7 ஆவது கிலோமீட்டரில் பத்து பாஹாட், ஆயர் ஹீத்தாமில் நிகழ்ந்தது.
ஒரு பேருந்து, ஒரு கனரக லோரி மற்றும் ஒரு டெங்கர் லோரி சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் இரண்டு ஆண் பயணிகள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
44 ஆண்கள், இரு பெண்கள் என மொத்தம் 46 பேருடன் வடக்கிலிருந்து ஜோகூரை நோக்கி அந்த சுற்றுலா பேருந்து சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. 43 மற்றும் 44 வயதுடைய இரு பயணிகள் இதில் மாண்டது உறுதிச் செய்யப்பட்டது.
14 ஆண் பயணிகள், ஒரு பெண் பயணி மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் காயயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








