பேராக், லாரூட் அருகே பழத் தோட்டக் குடிலில் பதுங்கியிருந்த 39 வயது நபர் ஒருவர், போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி, செலாமா மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இருவரைக் காயப்படுத்திய வழக்கில் இந்த நபர் தேடப்பட்டு வந்தார். நேற்று காலை 8.20 மணியளவில், Kampung Klian Gunung Ijok, Batu Kurau- வில் ஒரு குடிலில் அவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அவரைக் கைது செய்ய முயன்ற போது, திடீரென அரிவாளை எடுத்து போலீசாரைத் தாக்கப் பாய்ந்துள்ளார். இதனால், தற்காப்பிற்காகப் போலீசார் அவரது காலில் சுட்டதில், இரு தொடைகளிலும் காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். எனினும், அவர் தொடர்ந்து போலீசாருடன் மல்லுக் கட்டியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், காலை 9.20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்த நபருக்கு ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான 10 முந்தைய வழக்குகள் பதிவாகியுள்ளதாகப் பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் அலி ஜைனல் அபிடின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.








