கார் கவிழ்ந்து கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் கிள்ளான், பண்டமாரான் பகுதியில் உள்ள ஜாலான் புக்கிட் கெராயோங் சாலையில் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் கல் கட்டுமானத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்தைக் கண்ட பொதுமக்கள் காரை நிமிர்த்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கார் முதியவருடன் அருகிலிருந்த கால்வாய்க்குள் சரிந்து விழுந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் முதியவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இது குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்தி வருகிறது.








