ஜார்ஜ்டவுன், மார்ச்.22-
மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மலேசியாவில் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பினாங்கு பயனீட்டாளர் சங்கமான CAP (கேப்) எச்சரித்துள்ளது.
தற்போது ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோல் 2 ரிங்கிட் 05 சென்னுக்கு பூடி மடானி திட்டத்தில் ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு விற்கப்பட்டாலும், அதன் உண்மையான சந்தை விலை 3 ரிங்கிட் 27 சென் வரை உயர்ந்துள்ளது. இதனால் அரசாங்கம் ஒரு லிட்டருக்கு சுமார் ஒரு ரிங்கிட் 28 சென் மானியம் வழங்க வேண்டியுள்ளது என்று கேப்பின் தலைவர் தலைவர் முஹிதின் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் விலை உயர்வு நீடித்தால், அரசாங்கத்தால் இந்த மானியத்தைத் தொடர்ந்து வழங்க முடியாது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி, B40 மற்றும் M40 பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மலேசியா எண்ணெய் உற்பத்தி செய்தாலும், உள்நாட்டுத் தேவைக்காகச் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதால், உலகளாவிய விலை மாற்றங்கள் நேரடியாகப் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையைப் பாதிக்கும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








