ஷா ஆலாம், பிப்ரவரி.23-
சமூக ஊடகங்களில் பகிரப்படும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் 'நோன்பு திறப்பு' அழைப்பிதழ்கள் அல்லது சலுகைகள் தொடர்பான இணைய இணைப்புகளை அழுத்த வேண்டாம் என அரச மலேசியப் படை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்ற விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறுகையில், இதுவரை இத்தகைய போலி இணைப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை என்றாலும், ரமலான் மாதத்தை முன்னிட்டு இத்தகைய மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக போலீஸ் துறை கருதுகிறது.
இலவச நோன்பு திறப்பு விருந்து, ரமலான் நன்கொடைகள் அல்லது சிறப்பு அழைப்பிதழ்கள் என்ற பெயரில் போலி இணைப்புகளை அனுப்பி, மக்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கித் தகவல்களைத் திருட மோசடிக்காரர்கள் முயலக்கூடும்.
அடையாளம் தெரியாத அல்லது சந்தேகத்திற்குரிய ஆதாரங்களிலிருந்து வரும் எந்தவோர் இணைப்பையும் பொதுமக்கள் அழுத்த வேண்டாம். மேலும், தங்களின் வங்கி ரகசியக் குறியீடு , டிஏசி (TAC) எண் அல்லது ஏடிஎம் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என டத்தோ ருஸ்டி அறிவுறுத்தியுள்ளார்.








