மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட முறையில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்கு விதிக்கப்படவுள்ள தடையானது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, அவர்களின் பாதுகாப்பிற்காகவே எனத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பாட்சில் விளக்கமளித்துள்ளார்.
புதிய விதிமுறைப்படி, சிறுவர்கள் சுயமாகக் கணக்கு வைத்திருக்க முடியாது. ஆனால், பெற்றோரின் கணக்குகள் வழியாக அவர்களின் கண்காணிப்பில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம்.
ஆன்லைன் வேட்டையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் இணையத் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வரும் ஜூன் மாத இறுதியில் அமல்படுத்தப்படவுள்ள இந்த விதியில் மைகாட் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் வயது சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும்.
சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதை அரசு தடுக்கவில்லை என்றும், முன்பின் தெரியாத நபர்களுடன் அவர்கள் நேரடியாகத் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவே இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் டத்தோ ஃபஹ்மி உறுதிபடத் தெரிவித்தார்.








