பேராக் மாநிலத்தில் முன்கூட்டியே மாநிலத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரானி முஹம்மது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான அரசியல் ஆய்வுக் கட்டுரையில், பேராக் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இன்று ஈப்போவில் நடைபெற்ற பேராக் படைப்பாற்றல் நிதி விழாவின் பங்கேற்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தகைய செய்திகளைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். மாநில அரசு இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ ஆலோசனையும் நடத்தவில்லை என்றும், மக்கள் வழங்கிய ஐந்து ஆண்டு கால ஆணையை நிறைவு செய்ய இன்னும் ஓராண்டுக்கு மேல் அவகாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.








