கோலாலம்பூர், ஜன.27-
மிகப்பெரிய பணக்கார நாடுகளுக்கு உதவுவது மலேசியாவிற்கு மிக விருப்பமானதாகும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கிண்டல் செய்துள்ளார்.
மலேசிய நிறுவனமான YTL, பிரிட்டனில் 21.96 பில்லியன் ரிங்கிட்டிற்கு முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருப்பது குறித்து கருத்துகையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரிட்டனில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதை தாம் வரவேற்பதாகவும், இந்த முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாக அந்த நாட்டிற்கு புதியதாக 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் துன் மகாதீர் குத்தலாக கூறினார்.
பணக்கார நாடுகளுக்கு உதவுவது மலேசியாவிற்கு கைவந்த கலையாகும். சுத்திகரிக்கப்படாத தண்ணீரை தலா ஆயிரம் gellen- க்கு 3 காசு வீதம் 250 மில்லியன் கேளன் நீரை சிங்கப்பூருக்கு விற்பனை செய்கிறோம். அதே நீரை அந்நாடு சுத்திகரித்து மலேசியாவிற்கு ஆயிரம் கேளனுக்கு தலா 36ரிங்கிட்டிற்கு மலேசியாவிடம் திருப்பி விற்பனை செய்கிறது. இதுதான் மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் உள்ள வித்தியாசமாகும். மற்றவர்களுக்கு உதவுவதே மலேசியாவின் விருப்பமாகும்.
பிரிட்டன், சிங்கப்பூருக்கு அடுத்து தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மலேசியா உதவி வருகிறது என்று துன் மகாதீர் சீண்டினார்.







