Apr 20, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து
அரசியல்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

Share:

ஜசெக, உறுப்பினர்கள் அனைவரும், மக்கள் சேவையில் எப்போதும் “பணிவு, ஆர்வம் மற்றும் கவனத்துடன்” செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் ங்கா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

பினாங்கில் நேற்று நடைபெற்ற ஜசெக.வின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றிய வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங், கடந்த ஆறு தசாப்தங்களாக ஜசெக கட்சி, ஜனநாயகம் மற்றும் நீதிக்காகப் போராடி முதிர்ச்சியடைந்த ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். கட்சியின் பலமே அதன் பல்லின அடையாளம் தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தனது தலைமையிலான வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்ட சில முக்கிய சாதனைகள் குறித்தும் ங்கா கோர் மிங், தமது உரையில் பகிர்ந்து கொண்டார்

நாட்டின் சொத்து பரிவர்த்தனை முன் எப்போதும் இல்லாத வகையில், 241.9 பில்லியன் ரிங்கிட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது என்பதையும் ங்கா கோர் மிங் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் 5 லட்சம் மலிவு விலை வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட மற்றும் சிக்கலில் இருந்த 1,501 வீடமைப்புத் திட்டங்கள் மீட்கப்பட்டு, 1 லட்சத்து 80 ஆயிரம் வீடு வாங்குபவர்களின் நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 200 மில்லியன் ரிங்கிட் மற்றும் இந்தியக் குடியிருப்புகளின் மேம்பாட்டிற்கு 15 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் ங்கா கோர் மிங் விளக்கினார்.

அனைத்துலக அளவில், ஐநா-ஹபிடாட் தலைவராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது மலேசியாவிற்கு கிடைத்த அங்கீகாரம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜசெக என்றால் சொன்னதைச் செய்பவர்கள் என்று பொருள். நாம் எப்போதும் மக்களுடன் மக்களாக நின்று, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக உழைக்க வேண்டும்" என ங்கா கோர் மிங் தனது உரையில் வலியுறுத்தினார்.

Related News