6 எம்.பி- க்கள் உட்பட பெர்சத்து- வின் சட்டமன்ற உறுப்பினரும் தங்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் உறுதி மொழி கடிதத்திற்கு பதிலளிக்க தவறியதை தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாக பெர்சத்து கட்சியின் தலைவர் முஹ்யித்தீன் யாசின் அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்த உறுதி மொழி கடிதத்தில் கையெழுத்திட்டு திரும்பும் ஒப்படைக்கப்படும் நாள் கடத்த மே 31 ஆம் தேதி முடிவடைந்ததாக பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவின் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.
இதுவரையில் அந்த கடிதம் குறித்து எந்தவொரு பதிலும் அவர்களிடமிருந்து பெறப்படாத நிலையில் கட்சியில் உறுப்பினராக இருக்கும் பதவியை அவர்கள் இழந்து விட்டனர் என்று ரசாலி இட்ரிஸ் கூறினார்.
25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 58 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தலைமைத்துவத்திற்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்க போவதாக உறுதி மொழி கடிதத்தில் கையெழுத்திட்டு திரும்பி அனுப்பியதாக நேற்று முஹ்யித்தீன் யாசின் அறிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட ஆறு MP - க்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சிலாங்கூர் முதல்வர் அமிருதீன் ஷாரி - விற்கு ஆதரவளிப்பதை தொடர்ந்து, பெர்சத்து கட்சியில் இருக்கும் உறுப்பினர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், எந்தவொரு பிரதிநிதியும் கட்சியின் உத்தரவிற்கு பதிலளிக்கவில்லை என்றால் பெர்சத்து- வின் உறுப்பினராக இருக்கும் பதவியை தானாகவே இழந்து விடுவர் என்று ரசாலி இட்ரிஸ் தகவல் அளித்தார்.








