ரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற 'KESUMA PERKESO LINDUNG 2026' இப்தார் நிகழ்ச்சியில், சுமார் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சமூகப் பாதுகாப்பு அனுகூலங்கள் மற்றும் நன்கொடைகளை பெர்கேசோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.
இதில் 15 பயனாளர்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கண்ணை இழந்த 28 வயது இளைஞர் ஐடல் ஹிடாயத் அப்துல் ஹாதி என்பவருக்கு 82 ஆயிரிம் ரிங்கிட் நிரந்தர ஊனத்திற்கான பலனாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 100 ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பெருநாள் பணமான துவிட் ராயா – வும், கணவனை இழந்த 40 பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அன்பளிப்பு கூடைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், சிங்கப்பூரில் பணிபுரியும் சுமார் 4 லட்சம் மலேசியர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டமான 'ஸ்கிம் பெங்கெம்பாரா' குறித்த ஆய்வுகள் முடிவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்பதையும் அறிவித்தார். இதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.








