2014-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உதவ முன்வந்ததாகத் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, புக்கிட் அமானின் போலீசார் விசாரணை செய்யவுள்ளனர்.
ஹாடியின் அரசியல் செயலாளரும் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாஹிர் சுலைமான், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஹாடியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதை உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த விவகாரத்தில் ஹாடி அவாங், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும், அதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாடியின் இந்தக் கூற்று தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பண்டார் துன் ராஸாக் பிகேஆர் கிளையின் உதவித் தலைவர் வி. ஜோனாதன், மகளிர் பிரிவுத் தலைவி மஸ்லினா ஒஸ்மான், இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் அமாருல் ஹிஷாம் ஜாலில் ஆகியோர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








