2014-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி செயலுக்கு உதவ அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் முன்வந்ததாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய விவகாரத்தில், அமெரிக்க அரசாங்கம், ஹாடி மீது வழக்குத் தொடர வேண்டும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கை மட்டும் போதாது எனக் கூறிய அவர், ஹாடியின் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றால், அமெரிக்காவின் நற்பெயரையும் தூதரக அதிகாரிகளின் நேர்மையையும் பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஹாடியின் கூற்று சாதாரணமான குற்றச்சாட்டு அல்ல என்றும், இது தேசியப் பாதுகாப்பு தொடர்பான மிகத் தீவிரமான விவகாரம் என்றும் ராயர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஹாடி அவாங், அமெரிக்க பிரதிநிதிகள் பாஸ் தலைவர்களை அணுகி அப்போதைய பாரிசான் நேஷனல் அரசைக் கவிழ்க்க உதவி வழங்க முன்வந்ததாகக் கூறியிருந்தார்.
இதனிடையே, மலேசியாவின் அரசியல் தலைமையைத் தீர்மானிக்க அமெரிக்கா ஒருபோதும் முயற்சித்ததில்லை என மலேசியாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் கேம்பல் (David Gamble) நேற்று அறிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








