கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஸ் கட்சிக்கு அமெரிக்கா உதவி வழங்க முன்வந்ததாக அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது.
மலேசியாவின் அரசியல் தலைமையைத் தீர்மானிக்க அமெரிக்கா ஒருபோதும் முயற்சித்ததில்லை என்று மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஏச் கேம்பல் ஜேஆர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு தகவலும் “தவறானது” என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற பாஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஹாடி அவாங், 2014-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மலேசியா வந்திருந்த போது, பாஸ் தலைவர்கள் சிலர், அமெரிக்கத் தூதரகத்தில் சந்திப்புக்கு அழைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அப்போது தனது அரசியல் செயலாளர்களாக இருந்த தக்கியுடின் ஹசான் மற்றும் அஹ்மாட் சம்சூரி முக்தார் அந்தச் சந்திப்பில் பங்கேற்றதாகவும், அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாக கூறப்பட்டதாகவும் ஹாடி குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அமெரிக்க தூதர் தன்னை தனியாகச் சந்தித்து பாஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து கேட்டதாகவும் ஹாடி அவாங் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2018 -ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் ஆட்சியை இழந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், 2014-ஆம் ஆண்டு தொடர்பான ஹாடியின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.








