மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க வெளிநாட்டு தரப்பினர் பாஸ் கட்சிக்கு உதவி வழங்க முன்வந்ததாக பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2014ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா வந்திருந்தபோது, பாஸ் தலைவர்கள் அமெரிக்கத் தூதரகத்தில் சந்திப்புக்கு அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அப்போது தனது அரசியல் செயலாளர்களாக இருந்த தக்கியுடின் ஹசான் மற்றும் அகமட் சம்சூரி முக்தார் அந்தச் சந்திப்பில் பங்கேற்றதாகவும், அரசைக் கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாக கூறப்பட்டதாகவும் ஹாடி தெரிவித்தார்.
எனினும், பாஸ் தலைவர்கள் வெளிநாட்டு தலையீட்டை ஏற்க மறுத்ததாகவும் அவர் கூறினார்.
இதனை உறுதிப்படுத்திய தக்கியுடின், நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடுவதை பாஸ் ஒருபோதும் ஏற்காது என்று வலியுறுத்தினார்.








