சூதாட்ட நிலையங்களுக்கான உரிமங்களை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் மத்திய அரசாங்கம் மறுஆய்வு செய்து, புதிய சூதாட்ட உரிமங்களை வழங்குவதை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாஸ் கட்சியின் 72ஆவது பொதுப் பேரவையில், பாலிங் பாஸ் கிளை முன்வைத்த இந்தத் தீர்மானம் விவாதமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்தார்.
சூதாட்டத்தால் ஏற்படும் சமூக மற்றும் தார்மீக பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை அவசியம் என பாஸ் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் மற்றும் ஊராட்சி மன்றங்கள் சூதாட்ட நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் சட்ட வரம்புகள் இருப்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் காட்டுவதாகவும் ஃபத்லி கூறினார்.
எனவே, நிதி அமைச்சின் மூலம் சூதாட்ட உரிமக் கொள்கையை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு கடுமையான கொள்கைகளைச் செயல்படுத்த தெளிவான சட்ட வாய்ப்பை வழங்கும் வகையில் தொடர்புடைய கூட்டரசுச் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பாஸ் வலியுறுத்தியுள்ளது.








