மலேசிய அரசியல், இனம் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதற்கு, மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் டான் சீ கூனின் அரசியல் மரபு சிறந்த எடுத்துக்காட்டு என பொருளாதார நிபுணர் ஜோமோ க்வாமே சுந்தரம் தெரிவித்துள்ளார்.
டான் சீ கூன் மறைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற பொது கருத்தரங்கில் பேசிய ஜோமோ, மலேசிய அரசியல் ஒரு காலத்தில் இன அடிப்படையில் அல்லாமல், சிந்தனைகள், சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் நாட்டின் எதிர்காலக் கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கியதாகக் கூறினார்.
1960-களில் இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசியல் இயக்கங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், நாட்டின் அரசியல் போக்கை மாற்றியமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
1969-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இன அடிப்படையிலான அரசியல் வலுப் பெறத் தொடங்கியது என்றும் ஜோமோ குறிப்பிட்டார்.
இன அரசியல் மலேசியாவின் இயல்பான அரசியல் பண்பு அல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்றும், டான் சீ கூனின் போராட்ட மரபைத் தொடர்ந்து, இனங்களைத் தாண்டிய பொதுநல அரசியலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








