சமீபத்திய மாநிலத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஜசெக தனது எதிர்காலப் பாதையை மறுபரிசீலனை செய்து நாட்டின் மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் கடந்த 3½ ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் சாதனைகள் மற்றும் குறைபாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை விட, கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைப் பெறக்கூடிய சீர்திருத்தங்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று தொடங்கிய ஜசெக தேசிய மாநாட்டில் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், சொஸ்மா, அமைதிப் பேரணி சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களில் திருத்தம் செய்வது, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் அதிகாரங்களைப் பிரிப்பது, பிரதமர் பதவிக்காலத்தை இரு தவணைகளாக வரையறுப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என்றும் கோபிந்த் சிங் முன்மொழிந்துள்ளார்.
இதனிடையே, மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசியல் நிலைத்தன்மை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஜசெக கட்சியானது ஒற்றுமை அரசாங்க கூட்டணியில் தொடர்வதா? அல்லது விலகுவதா? என்பது குறித்த தீர்மானத்தை 4,264 பிரதிநிதிகள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இன்று முடிவு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








