பிகேஆர் கட்சியானது பல்வேறு துரோகங்களை எதிர்கொண்டாலும், தொடர்ந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும் என அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் தேசிய மாநாட்டில், இன்று ஞாயிற்றுக்கிழமை தனது நிறைவுரையில் பேசிய நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாட்லீனா, ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள போதிலும் அதனை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களை கடுமையாக விமர்சித்தார்.
தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு துரோகங்களை சுட்டிக் காட்டிய ஃபாட்லீனா, பிகேஆர் இதைவிட மோசமான துரோகங்களை ஏற்கனவே சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த முன்னாள் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவலை அவர் நினைவுகூர்ந்தார்.
அதேவேளையில், வெளியில் எத்தகைய அரசியல் நகர்வுகள் நடந்தாலும் அதை எதிர்கொள்வோம் என்றும், தங்களது பாதையில் எத்தகைய தடைகள் வைக்கப்பட்டாலும் அவற்றை முறியடிப்போம் என்றும் ஃபாட்லீனா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிகேஆர் கட்சியின் எதிர்கால வலிமை, கூட்டணி அரசியலில் யார் தங்களுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், கட்சிக்காக தொடர்ந்து களத்தில் உழைக்கும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பில்தான் உள்ளது என்றும் ஃபாட்லீனா வலியுறுதியுள்ளார்.








