மலாக்கா மாநில சட்டமன்றத்தின் 28 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பெர்சாமா கட்சி அறிவித்துள்ளது.
இதன் மூலம் மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முதலில் அறிவித்த கட்சியாக பெர்சாமா மாறியுள்ளது.
அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலேவின் மூத்த சகோதரரான டாக்டர் முஹமட் சொலேஹின் சாலே இடம் பெற்றுள்ளார். அவர் பெம்பான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், வாக்காளர்கள், தங்களது தொகுதி வேட்பாளர்களையும் அவர்களது திட்டங்களையும் மதிப்பிடுவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் என்று நேற்று இரவு மலாக்கா பாருவில் நடைபெற்ற வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் அக்கட்சியின் இணை நிறுவனரான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
“மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது குறித்து யோசிப்பதற்கு முன்பே நாங்கள் இதைச் செய்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பெர்சாமா போட்டியிடும் மற்ற தொகுதிகள் கோலா லிங்கி, ரெம்பியா, காடேக், மாச்சாப் ஜெயா, சுங்கை ஊடாங், பாயா ரும்புட், கிளேபாங், பெங்காலான் பத்து, ஆயர் கெரோ, புக்கிட் கடில், கெசிடாங், கோத்தா லக்சாமானா, தெலுக் மாஸ் மற்றும் ஸெரிஅன் ஆகியவையாகும்.
வேட்பாளர்களின் பின்னணி, திறன் மற்றும் திட்டங்களை வாக்காளர்கள் ஆராயவும், உள்ளூர் மக்களுடன் உறவுகளை உருவாக்கவும், தொகுதிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் இந்த முன்கூட்டிய அறிவிப்பு உதவும் என்று ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மலாக்கா வாக்காளர்களுக்காக தனிப்பட்ட தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கை முன்மொழிவுகளை தயாரிக்கும் பணியில் கட்சியின் குழு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.








