பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா, இல்லையா? என்பது குறித்து ஜசெக நாளை ஞாயிற்றுக்கிழமை எடுக்கவிருக்கும் முடிவை, பிகேஆர் சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானின் கூட்டணிக் கட்சிகளாக, மக்களின் நலனே தங்களது முதன்மையான நோக்கம் என்றும், ஜசெக எடுக்கும் எந்த முடிவும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, ஜசெக-வின் நாளைய வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், தற்போது தங்களது கவனம் பிகேஆர் கட்சியின் தேசிய மாநாட்டிலும், கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துவதிலும் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.
ஜசெக நாளை நடைபெறும் தேசிய மாநாட்டில், தற்போதைய நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வதா அல்லது அமைச்சரவையிலிருந்து விலகுவதா என்பது குறித்து பேராளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
ஜசெக விலகும் முடிவை எடுத்தால், அது ஒற்றுமை அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துவது குறித்த அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.








