கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, ஜசெக கட்சியானது எதிர்க்கட்சியாக தனது செயல்பாடுகளைத் தொடரும் நிலையில், மீண்டும் அடிதட்டு மக்களுடன் இணைந்து இணக்கமாக செயல்படத் தொடங்கும் என அக்கட்சியின் புதிய மாநிலத் தலைவர் J Arul Kumar தெரிவித்துள்ளார்.
41 வயதான J Arul Kumar, கடந்த 22 ஆண்டுகளாக நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவராக வழிநடத்திய அந்தோணி லோக்குக்குப் பதிலாக இன்று தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
மாநிலத் தேர்தலில் ஜசெக இழந்த ரெப்பா , சென்னா தொகுதிகள் உட்பட, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதே கட்சியின் தற்போதைய முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலாய் தொகுதியை கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நான்கு தவணைகளாக பிரதிநிதித்துவப்படுத்தி வரும் அருள் குமார், தனது முதல் நடவடிக்கையாக ஜசெக-வின் 140 கிளைகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, கட்சியின் களப்பணியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தோணி லோக் தலைமைத்துவத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் ஒற்றுமையைத் தொடர்ந்து பாதுகாப்பதே முக்கியம் என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சியாக அரசாங்கத்தை கண்காணித்து, தேவையான இடங்களில் குரல் கொடுக்கவுள்ளதாகவும், அதேவேளையில் மக்களுக்கு பயனளிக்கும் நல்ல கொள்கைகள் தொடர வேண்டும் என்றும் Arul Kumar தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் -ஐ இந்த வாரம் சந்தித்து, மக்களின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படக்கூடிய அம்சங்கள் குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார்.
அரசியல் ரீதியாக இரு தரப்பும் வெவ்வேறாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக ஒத்துழைக்கத் தயார் என்றும் அருள் குமார் உறுதியளித்துள்ளார்








