எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாரிசான் நேஷனல் கூட்டணி வெளிப்படையாக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதை பக்காத்தான் ஹராப்பான் வரவேற்றுள்ளது.
இதனை இரு தரப்பும் ஆராய வேண்டிய நல்ல வாய்ப்பாக கருதுவதாக பக்காத்தான் ஹராப்பான் தொடர்புப் பிரிவு இயக்குநர் டத்தோ ஶ்ரீ பாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் லெம்பா பாந்தாய் பகுதியில் நேற்று நடைபெற்ற Gotong-royong Mega Perangi Aedes நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபாஹ்மி ஃபாட்சீல், மலாக்காவின் எதிர்கால அரசியல் நிலைத்தன்மை மற்றும் நாட்டின் நலன் கருதியும் பாரிசானின் இந்தத் திறந்த அணுகுமுறை தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் மாநில பிகேஆர் தலைவர் அடாம் அட்லி, மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோஃபை நேரடியாகத் தொடர்பு கொண்டு மாநில சட்டமன்றத் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதையும் ஃபாஹ்மி ஃபாட்சீல் சுட்டிக் காட்டியுள்ளார்.
மலாக்காவில் தற்போது பாரிசான் 21 தொகுதிகளையும், பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளையும் கொண்டிருப்பதால், தொகுதிப் பங்கீடு என்பது நடைமுறைக்கு ஏற்ற வகையில் ஆராய வேண்டிய விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று சனிக்கிழமை பாரிசான் நேஷனல் கூட்டணித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மலாக்கா தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நேர்மையாகவும், கட்சிகளின் தொகுதி எண்ணிக்கையைப் பாதிக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








