பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில், தற்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இது குறித்து பிரதமரின் மூத்த ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்வார் இப்ராஹிம் இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் சுமூகமாக நடைபெறவும், அவர் நீண்டகாலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து விரைவில் வழக்கம்போல் தனது பணிகளைத் தொடரவும் பிரார்த்திப்போம் என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த அறிக்கையில், பிரதமர் மேற்கொண்டு வரும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளின் தன்மை குறித்த எந்தவொரு விவரமும் வெளியிடப்படவில்லை








