பெர்சத்து (Bersatu) கட்சியிலிருந்து அண்மையில் விலகிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது அரசியல் போராட்டத்தைத் தொடர, பார்ட்டி வாவாசான் நெகாரா எனும் வாவாசான் கட்சி தனது கதவுகளைத் திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து வாவாசான் திராங்கானு ஒருங்கிணைப்பாளர் டத்தோ அப்துல் அஜிஸ் இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதிய தேசிய ஒருமித்த கருத்து' எனும் தத்துவத்தின் கீழ், மக்கள் நலனை முன்னிறுத்தி முதிர்ச்சியான அரசியலைத் தொடர விரும்பும் முன்னாள் பெர்சத்து தலைவர்களுக்கு வாவாசான் கட்சி ஒரு சிறந்த புதிய தளமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பெர்சத்து திராங்கானு தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ், தகவல் தொடர்புத் தலைவர் முகமட் ஜவாவி மற்றும் பொருளாளர் முகமட் ஹுசைமி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில், முன்னாள் பெர்சத்து தலைவர்கள் வாவாசான் கட்சியுடன் இணைந்து தங்களது அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும் என்ற கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.








