வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, குறிப்பாக 'தொகுதி மாற்று' முறை குறித்து பேச்சு வார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இன்று கூடாட்டில் ருங்குஸ் கலாச்சார விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகமட் ஜாஹிட், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை எந்தவொரு கட்சியும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், சம எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தங்களுக்குள் மாற்றிக் கொள்வது குறித்துப் பேசலாம் என்றார்.
முன்னதாக, மலாக்காவில் கடந்த முறை வென்ற 21 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் மீண்டும் போட்டியிடும் என ஜாஹிட் ஹமிடி அறிவித்திருந்ததை, பிகேஆர் இளைஞர் பிரிவு விமர்சித்திருந்தது.
இதற்குப் பதிலளித்த அகமட ஜாஹிட், "தொகுதிப் பங்கீட்டிற்கான கதவு முழுமையாக மூடப்படவில்லை. நேர்மையான முறையில் பேச்சு வார்த்தை நடத்த மற்ற கட்சிகள் முன்வந்தால், மலாக்காவில் மட்டுமன்றி அவர்கள் வசம் உள்ள மற்ற மாநிலங்களிலும் தொகுதி மாற்று முறை குறித்துப் பேச பாரிசான் நேஷனல் தயாராக உள்ளது," என்று தெளிவுபடுத்தினார்.








