மாநிலத் தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அனைத்து இன மக்களின் ஆதரவைப் பெறும் தனது இலக்கை ஜசெக ஒருபோதும் கைவிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
ஜசெக தொடங்கிய காலம் முதலே இன அரசியலின் தடையைத் தாண்டுவது கட்சிக்கு பெரும் சவாலாக இருந்து வருவதாகக் கூறிய அவர், ஜசெக ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1970-களில் இருந்து இன்று வரை, இன அரசியலின் சுவரை உடைத்து அனைத்து மக்களிடமும் சென்றடைவதே எங்களது சவாலாக இருந்து வருகிறது என்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று தொடங்கிய கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று, ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை சித்தரிக்கும் நாடகத்தைப் பார்த்ததாகவும், அது தன்னை பெரிதும் ஊக்கப்படுத்தியதாகவும் அவர் விவரித்துள்ளார்.
1970-களில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த லிம் கிட் சியாங் விடுதலையான பின்னர், அப்போதைய மசீச தலைவர் ஒருவர் ஜசெக-வை கலைத்து விட்டு மசீச-வில் இணைந்து அரசாங்கத்தில் சீனர்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
என்றாலும் அந்த முன்மொழிவை நிராகரித்த லிம் கிட் சியாங், ஜசெக என்பது சீனர்களுக்காக மட்டுமல்ல, அனைவருக்குமானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகவும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக கட்சி உறுப்பினர்களிடம் அந்தோணி லோக் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
எதிர்கொள்ளும் சவால்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், ஜசெக தனது பல இனக் கொள்கையிலிருந்து பின்வாங்கக் கூடாது என்றும் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.








