பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பணிகளை இடைக்காலமாக மேற்கொள்ளும் முழுப் பொறுப்பையும் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு அக்கட்சியின் தலைவரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கியுள்ளார்.
தற்போதைய துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் தற்காலிக விடுப்பில் இருப்பதால், இந்தப் பொறுப்பை சைஃபுடின் ஏற்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற பிகேஆர் தேசிய மாநாட்டில் நிறைவுரையாற்றிய அன்வார், சைஃபுடின் நீண்டகாலமாக தமக்கு நெருக்கமானவராகவும், தமது பணியாற்றும் முறையை நன்கு அறிந்தவராகவும் இருப்பதால் இந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிகேஆர் கட்சி இயந்திரம் அவருக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பு மற்றும் விசுவாசத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, மற்றொரு உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கட்சியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் பிரதமர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் அறிவித்தார்.
நெகிரி செம்பிலான் விவகாரத்தில், டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் உதவித் தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பொறுப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பிகேஆர் தோல்வியடைந்ததற்கு அமினுடினை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது என்றும், தோல்விக்கான பொறுப்பை கட்சி கூட்டாக ஏற்றுக் கொண்டு தவறுகளைத் திருத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.








