மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், எதிர்வரும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறுகையில், தற்போது இரு கூட்டணிகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுகள் மட்டுமே நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மலாக்கா மாநில பாரிசான் நேஷனல் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தைகளை நடத்தி இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி, அப்துல் ரவுஃப் யுசோவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும், அம்னோ மற்றும் பாரிசான் மத்திய தலைமையின் கொள்கை முடிவுகளுக்காக ரவுஃப் காத்திருப்பதாகவும் ஸாஹிட் விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த தேர்தலில் வென்ற 21 தொகுதிகளையும் பாரிசான் நேஷனல் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ள ஸாஹிட், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலாக்காவில், 2021-ஆம் ஆண்டு தேர்தலில், பாரிசான் நேஷனல் 21 இடங்களிலும், பக்காத்தான் ஹராப்பான் 5 இடங்களிலும், பெரிக்காத்தான் நேஷனல் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், தற்போதைய மாநில அரசின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.








