பாங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங், ஜசெக கட்சியில் இருந்து விலகுவதாக இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
எனினும், தனது விலகலுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில், எதிர்காலத்தில் வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் திட்டம் இல்லை என்றும், அடுத்த பொதுத் தேர்தலிலும் வேட்பாளராகக் களமிறங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கு அனுப்பிய விலகல் கடிதத்தில், பாட்காஸ்ட், ஆலோசகர் பதவிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நாட்டிற்குத் தொடர்ந்து சேவையாற்றப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் கைரி ஜமாலுடினுக்கு தேர்தல் பிரசாரத்தில் உதவுவதாக கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அளித்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றப் போவதாகவும் ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.
செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினராக 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரையும், பாங்கி நாடாளுமன்ற உறுப்பினராக 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையும் பதவி வகித்த ஓங் கியான் மிங், 2018 முதல் 2020 -ஆம் ஆண்டு வரை அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.








