டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி எதிர்கொள்ளும் 47 குற்றச்சாட்டுகளை சட்டத்துறை அலுவலகம் மறுஆய்வு செய்ய வேண்டும் என ஜசெக வலியுறுத்தியிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு, ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கெடா, பெங்கலான் குண்டூர் சட்டமன்ற உறுப்பினர் Mardhiyyah Johari, கூறுகையில் 2022 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டரசு அரசாங்கம் அமைக்க அம்னோவின் ஆதரவு தேவைப்பட்டபோது, ஜசெக ஏன் ஜாஹிட் வழக்கை எழுப்பவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராம்கர்பால், ஜாஹிட் வழக்கில் ஜசெக ஏற்கெனவே பலமுறை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
2023 செப்டம்பர் 4ஆம் தேதி டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு விடுதலை அல்லாத வழக்கு முடித்துவைப்பு வழங்கப்பட்ட மறுநாளே, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், சட்டத்துறை தலைவரின் முடிவுக்கு விளக்கம் கோரியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் சட்டத்துறை அலுவலகத்திடம் விளக்கம் கோரியதாக ராம்கர்பால் தெரிவித்தார்.
ஜாஹிட் வழக்கில் சட்டத்துறை தலைவரின் முடிவு அர்த்தமற்றதாக இருப்பதால், ஜசெக தொடர்ந்து கேள்வி எழுப்பும் என்றும் அவர் கூறினார்.








