16-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் யார் பிரதமராகப் பதவி ஏற்பார்கள்? என்பது குறித்து தற்போது விவாதிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என பாரிசான் நேஷனல் கூட்டணியின் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதே இன்னும் தெரியாத நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவது மிகவும் முன்கூட்டியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலாக, அடுத்ததாக வரக்கூடிய மலாக்கா மாநில தேர்தல் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமது கூட்டணி தலைவர்களுக்கு ஸாஹிட் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளையில் மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே, தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
அதுவரை கூட்டரசு அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களை ஒதுக்கி வைப்பது சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பிரதமர் பதவிக்கு தங்கள் கட்சியில் இருந்து ஒருவர் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெயரை வெளியிடுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றும் பாஸ் தலைவர் அப்துல் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








