பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்விக் கழகங்களில் இணையும் சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான 'உயர்கல்விக்கழக கல்விப் பரிசு' திட்டத்தின் கீழ், பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு 5 ஆயிரமாக உயர்த்துவதற்கு மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
நடப்பு ஆண்டில் 3,000 மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசின் வருவாய் அதிகரிப்புக்கு ஏற்ப, பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 முதல் 6,000 பேர் வரை உயர்த்துவது குறித்து சிலாங்கூர் அரசு மதிப்பிட்டு வருகிறது.
இந்த கூடுதல் ஒதுக்கீடு மற்றும் திருத்தங்கள், வரவிருக்கும் சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் தகுதிவாய்ந்த திறன் சான்றிதழ் படிப்புகளில் இணையும் சிலாங்கூர் மாணவர்களுக்கு இந்த 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி கடிதத்தைப் பெற்ற பிறகு விண்ணப்பிக்கப் போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில், விண்ணப்பக் காலத்தை நீட்டிக்கவும், ஆண்டுக்கு இருமுறை விண்ணப்பங்களைத் திறக்கவும் சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.








