முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான வீட்டுக் காவலைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ அந்தோணி லோக் அமைச்சரவையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தமது ராஜினாமா கடிதத்தை விரைவில் சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜசெக தலைமைச் செயலாளரான அந்தோணி லோக், இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த முடிவை அறிவித்தார்.
எனினும், தாம் மட்டுமே அமைச்சரவையிலிருந்து விலகுவதாகவும், ஜசெகவைச் சேர்ந்த ஏனைய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்து இடம் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கும் மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்தை ஜசெக மதிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்த லோக், அதேவேளை சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பு தொடர்பாக ஜசெக தனது அடுத்தகட்ட நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதற்காக இன்று அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தை நடத்தியது.








