அரசாங்கத்திலிருந்து ஜசெக வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும்பான்மை ஆதரவை இழந்து நாடாளுமன்றம் கலைக்கப்படும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் சில தரப்பினர் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக ஜசெக தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அத்தகைய அரசியல் நிலைமைக்கு ஜசெக இடமளிக்காது என்றும், நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதைத் தவிர்க்கவே, தாம் மட்டும் அமைச்சரவையிலிருந்து விலக முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் உள்ள ஜசெக தலைமையகத்தில் நடைபெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக், ஜசெகவைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் தங்களது பதவிகளில் தொடர்ந்து இருப்பார்கள் என்றார்.
ஜசெக உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயாராக இருந்தாலும், தற்போதைய சூழலில் அரசாங்கத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அவர்கள் பதவிகளில் தொடர மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜசெக வெளியேற வேண்டும் என்ற அரசியல் கணக்குகளுக்கு ஜசெக இடமளிக்காது – அதுவே கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்றும் அந்தோணி லோக் கூறினார்.








