முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான மன்னிப்பு விவகாரத்தால், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையேயான உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
அரசாங்க விவகாரங்களை நிர்வகிப்பதில் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து தொழில்முறையுடன் செயல்படுவதாகவும், அமைச்சரவை எடுக்கும் அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸாஹிட், நஜிப் தொடர்பான மன்னிப்பு முடிவு கூட்டரசு அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டது என்றும், மாமன்னரின் முடிவை மதிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், அம்னோவும் பாரிசான் நேஷனலும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.








